கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற கூவாகம் கூத்தாண்டவர் கோவில் பகுதியில் இன்று பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் தங்க நகை திருட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
திருநங்கைகள் பெருமளவில் கலந்து கொண்டு ஆண்டுதோறும் கொண்டாடும் சித்திரை திருவிழா கடந்த 14ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கோவிலின் மூலவர் கூத்தாண்டவருக்கு அணிவிக்கப்பட்டிருந்த சுமார் 23 சவரன் எடையுடைய தங்கச் சங்கிலி இன்று காலை சுமார் 8 மணியளவில் காணாமல் போனது.
கோவிலுக்குள் பக்தர் போல் நுழைந்த மர்ம நபர் ஒருவர், சாமி தரிசனம் செய்வது போல நடித்து, அவ்வழியாக நகையை திருடிச் சென்றிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். சம்பவம் அறிந்த உடனே கோவில் நிர்வாகத்தினர் போலீசில் புகார் அளித்தனர்.
இதையடுத்து, போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். கோவிலில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகள் ஆய்வு செய்யப்படுகின்றன. மேலும், கோவிலுக்கு வந்திருந்த பக்தர்கள் மற்றும் ஊழியர்களிடம் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
திருவிழா நடைபெற்று கொண்டிருக்கும் நேரத்தில் இப்படியான திருட்டு சம்பவம் நடைபெற்றிருப்பது பக்தர்கள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. போலீசார் குற்றவாளியை விரைவில் கைது செய்வோம் என தெரிவித்துள்ளனர்.
D.செல்வம்
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்தியாளர்
தமிழக குரல்.


No comments:
Post a Comment